எது சொர்க்கம் ?

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு!












சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து

நெரிசலில் சிக்கி

கடமை அழைக்க

காற்றோடு செல்கிறேன்

காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை பழகிப் போகுமோ ? வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை தொலைந்து போகுமோ ?


சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போக
வாழ்க்கை தொலைந்து போகுமோ
மொத்தமும்! புரியாது
புலம்புகிறேன் நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்

சொந்தங்களோடு

சோறு திண்பவன் யாரடா ?
இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா....

No comments:

Post a Comment